இசையமைப்பாளராகவும் நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்ற விஜய் ஆன்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படம், ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆன்டனி. விடா முயற்சியுடனும் ஆழ்ந்த அர்பணிப்புடனும் களம் காணும் விஜய் ஆன்டனியின் ஒவ்வொரு படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், அவரது பிறந்த நாளானா ஜூலை 24ஆம் தேதி, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து விஜய் ஆன்டனி தெரிவித்ததாவது…

“2021ஆம் ஆண்டு திரையுலகுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. நேர் மறையான கருத்துக்களையே என் படங்களில் எப்போதும் நான் வலியுறுத்துவது வழக்கம். இந்தப் படமும் அப்படியே அமைந்திருக்கும். படத்தை இயக்குவது குறித்து மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இது குறித்த அறிவிப்பு கண்டிப்பாக ஆச்சரியம் மிக்கதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு சற்றே காத்திருங்கள்” என்று தனக்கே உரித்தான நம்பிக்கையூட்டும் புன்முறுவலுடன் தெரிவித்தார் விஜய் ஆன்டனி.

‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வரும் விஜய் ஆன்டனி, ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார். தயாரிப்பின் பல்வேறு படிநிலைகளிலும் இப்படங்கள் இருக்கின்றன.

விஜய் ஆன்டனி புரொடக்ஷன்ஸ் பத்தாவது தயாரிப்பாக உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.