இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் தற்போது ‘மனம்’ என்கிற குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். குறும்படம் என்றாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள லீலா சாம்சனும், பரணிதரனும் தான் இந்த குறும்படத்தின் ஆணிவேர்கள் என்றால் அதில் மிகையில்லை.

லீலா சாம்சன்,, ஓகே கண்மணி படத்தில் தனது இயல்பான அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தக் குறும்படத்தின் கதையோட்டத்துடன் இணைந்து அவர் நடித்த விதத்தை பார்க்கும்போது ஒரு திரைப்படம் பார்த்த உணர்வே நமக்கு ஏற்படுகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து லீலா சாம்சன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“மணிரத்னம் சார் இயக்கத்தில் ”ஓகே கண்மணி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அதில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராம் மகேந்திரா எனக்கு அறிமுகமானார். இந்த மனம் குறும்படத்தின் கதையை அவர் எப்போது உருவாக்கினாரோ தெரியாது, திடீரென ஒருநாள் என்னிடம் இதில் நடிக்க முடியுமா? என்று கேட்டார்..

அனுதாபம் கலந்த அதேசமயம் ஒரு நல்ல கருத்தும் சொல்கிற மாதிரியான, அவர் சொன்ன அந்த கரு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மிகக் குறைந்த ஆட்களுடன் மிக நேர்த்தியாக இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். ஒருவேளை இந்த கதாபாத்திரத்தில் அவர் எனக்கு முன் யாரையாவது நினைத்து வைத்திருக்கலாமோ என்னவோ..? ஆனால் இந்த கேரக்டர் என்னைத் தேடி வந்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி… இது ஒரு பெரிய குறும்படமாக உருவாகும் என படப்பிடிப்பு சமயத்தில் எனக்கு தெரியாது.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவது போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இயக்குநர் ராம் மகேந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் செயல்பட்டனர்.. அதுதான் என்னை ரொம்பவும் கவர்ந்தது. மன்னிக்கும் மனம் வேண்டும்,, மற்றவர்களின் பிரச்சனைகளைப் பற்றி புரிந்துகொள்ளவும் வேண்டும்.. இதுதான் இந்த குறும்படம் சொல்ல வரும் செய்தி..

இந்த சமயத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை பார்த்தீர்களா..? இந்த கோவிட்-19 பாதிப்பால் அவர்களுக்கு நாம் உதவி செய்ய நினைத்தாலும் முடியவில்லை.. நிறைய பேருக்கு உதவிகள் போய்ச் சேரவில்லை… ரொம்ப சோகமான சூழ்நிலை இது.. இதேபோல மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சோகமான சூழல் இருக்கும்.. அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த குறும்படம் அதைத்தான் உணர்த்துகிறது” என்கிறார் லீலா சாம்சன்.

குறிப்பாக லீலா சாம்சனின் இயல்பான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.