தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு , நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









Leave a Reply