மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது :

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானின்று வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

மாணவ, மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன். உங்களுக்கு போன வாரம் முன்னாடி, போன மாசம் இருந்த ஏதோவொரு மிகப் பெரிய கவலை, வேதனை இப்போ இருக்கா? யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், ஏன்? இல்லாமல்கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரை விட பெருசில்லை. உங்கள் மனசுக்கு கஷ்டமாக இருக்கா? நீங்க நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள், அப்பா, அம்மா, பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாரிடமாவது எல்லாத்தையும் மனசுவிட்டு பேசிடுங்கள். இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இவையெல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையும் விஷயங்கள்.

தற்கொலை.. வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.. என்று முடிவு பண்றதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா, அம்மா, குடும்பத்திற்கு நீங்க கொடுக்கும் வாழ்நாள் தண்டனை, மறந்துடாதீங்க.

நான் அத்தனை எக்ஸாம்ல ஃபெயில் ஆகியிருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமாக மார்க்ஸ் வாங்கியிருக்கேன். அதுனால உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும்.
மதிப்பு, தேர்வு இதுமட்டுமே வாழ்க்கையில்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம்.

நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால், எல்லோரும் ஜெயிக்கலாம். பெருசா ஜெயிக்கலாம்.

அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.