ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் அனுபமா விக்ரம் சிங், “’மையல்’ படக்குழு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கதையில் ஆன்மா இருக்கிறது. இந்தப் படத்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “தேனப்பன் இதில் பணிபுரிந்திருப்பதும் மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே. சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். அமருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! கிராமத்து படம் எனும்போது லைவ்வாக இசை அமைய வேண்டும். அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களும் படமும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் இயக்குநர் அழகாக செய்துக்கியுள்ளார். ‘மையல்’ இல்லை என்றால் மனிதமே இல்லை. ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் மையல் கொள்ளவில்லை என்றால் இனப்பெருக்கமே இல்லை. இந்த ‘மையல்’ மிகப்பெரிய வெற்றியை மனிதக்குலத்திற்கு தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால் ரஜினியோ கமலோ உருவாகி இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் செய்வதை சரியாகச் செய்தாலே திரைத்துறை நன்றாக இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் எனக்குப் பிடித்த இயக்குநர். எல்லோரையும் அரவணைத்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தான் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளரின் மகனது படத்தின் விழாவிற்கு கே.எஸ். ரவிக்குமார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பெருமிதமான தருணம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!”.
இயக்குநர் ஏழுமலை, “இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். என் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் சங்கத்தில் இருந்து வாழ்த்த வந்திருக்கும் அனைத்து முன்னோடி இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். சவுந்தர்யன் சாருடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.







Leave a Reply