யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், சாந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், பிரமாண்டமான ஃபேண்டஸி அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியுள்ளார்.
கோடை விடுமுறை கொண்டாட்டமாக, இப்படத்தை மே 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்த படக்குழு, அறிவித்தது போல் நேற்று (மே 9) படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதோடு, நேற்றே பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு திரையிடல் காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் வெகுவாக பாராட்டியதோடு, ”நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிமேஷன் காட்சிகள் நிறைந்த, சுவராஸ்யமான ஃபேண்டஸி படத்தை பார்த்தோம். நிச்சயம் இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்று பாராட்டினார்கள்.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் யுத்த மனநிலைக்கு மாறியுள்ளனர். இந்த போரின் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நம் அண்டை மாநிலங்களும், அம்மக்களும் பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்படும் செய்திகளால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், மக்களிடம் தற்போது திரைப்படம் பார்க்கும் மனநிலை இல்லை என்பதாலும், அனைவரும் போர் பதற்றம் குறித்த செய்திகளை அறியவே விருப்பம் காட்டுவதால், திரையரங்குகளுக்கு மக்களின் வருகை மிக மிக குறைவாகவே உள்ளது.
எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்ததோடு, பல வருடங்களாக உழைத்து மிகச்சிறந்த வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலம் உருவாக்கிய ‘கஜானா’ திரைப்படத்தை ஒரு சாதாரண வெளியீட்டாக அல்லாமல், பெரும்பாலான மக்கள் பார்த்து மகிழக்கூடிய மிகப்பெரிய வெற்றி படமாக்க வேண்டும், என்பதற்காக படக்குழு படத்தின் வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘கஜானா’ படத்தை இன்று மாலை காட்சியோடு நிறுத்த முடிவு செய்துள்ள படக்குழு, யுத்த பதற்றம் தணிந்த பிறகு வேறு ஒரு நல்ல தருணத்தில், படத்தைப் போலவே வெளியீட்டையும் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி, இதுவரை தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து, தங்களது முயற்சிக்கும், உழைப்பிற்கும் ஊக்கமளிக்கும் ஊடகத்தினர், எங்களது இந்த முடிவுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ‘கஜானா’ படத்தின் மறுவெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Leave a Reply