ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்று, அந்த ஊரின் பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இவை அனைத்தும், ‘எல்லம்மா’ திரைப்படத்தின் ஆன்மாவுடன் நெருக்கமாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜாத்தாரா திருவிழா கொண்டாட்டங்களின் போது, ஊரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் தங்கி, கிராம மக்களுடன் அன்பாக உரையாடி, விழாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார உற்சாகத்தில் முழுமையாக கலந்து கொண்டார். அந்த அனுபவங்களையும், நினைவுகளையும், திருவிழாவின் கலாச்சார கொண்டாட்டத்தையும் பதிவு செய்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பது, “என் அப்பா பிறந்த கிராமம் வேதுருபாகா. நாங்கள் சிறு வயதில் இருந்தபோது, சென்னையிலிருந்து அடிக்கடி எங்களை அழைத்து வந்து, இயற்கை அழகை உணரச் செய்த ஊர் இது. நம்முடைய மக்களுடனும் கலாச்சரத்துடனும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த கிராமத்தில் அழகான வீடு கட்டியிருக்கிறோம்.
கலாச்சாரம், நாட்டுப்புறக் கலை மற்றும் தெய்வீகத்தின் அழகை எனக்கு கற்றுத்தந்த இந்த ஊர்தான் என்னை ‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தது” என்றார்.
தனது சொந்த ஊர் மக்களுடன் தேவி ஸ்ரீ பிரசாத் கொண்டுள்ள ஆழமான பிணைப்பை அழகாக வெளிப்படுத்துவதோடு, அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘எல்லம்மா ‘ படத்தின் ஆன்மாவையும் இது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
தில்ராஜு வழங்கும் இந்தப் படத்தை வேணு யெல்தண்டி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சிரீஷ் தயாரிக்கிறார். ‘எல்லம்மா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

