பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா – திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர்.
நிவாஸ் கே.பிரசன்னா பேசுகையில், “என் சொந்த ஊர் திருநெல்வேலிதான். ஜெகன் கவிராஜ் எனக்கு எப்படிப் பழக்கம்ன்னா, ‘மை டியர் சிஸ்டர்’ எனும் பத்திற்கு நான் மியூசிக் பண்ணேன். அப்படத்தில் அவர் நடிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம், ‘ஜெகன்னு ஒருத்தர் இருக்கிறார். நல்லா எழுதுவார்’ எனச் சொன்னார். மியூசிக் டைரக்டர்ஸ் நாங்க எப்பவும் ஒரு பாடலாசிரியரோடு கம்ஃபர்ட் ஜோன் எதிர்பார்ப்போம். டக்குன்னு புதுசா ஒருத்தங்களிடம் மாறும்போது ஒரு சின்ன தயக்கம் இருக்கும். அதனால் நான் கொஞ்சம் தயங்கினேன். ‘இல்ல, நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க’ என்றார் பிரபு ஜெயராம். ‘அப்படியா!’ என ஃபோனில் ஜெகனுக்கு ஒரு சந்தம் கொடுத்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் முழுப் பாடல் எழுதிக் கொடுத்துட்டார். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஆரம்பித்து. பின் நிறையப் பேச ஆரம்பிச்சோம். ஆன்மிகம் பேசுவோம். அவரிடம் ஒரு நகைச்சுவைத்தன்மை இருக்கும். ஜெகனிடம் ஒரு ரிதம் இருப்பது தெரிய வந்தது. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் ஒரு ரிதம் இருக்கு. கம்போசர்ஸா எனக்கொரு சைலன்ஸ் தேவை; ரைட்டர்ஸா அவங்க ஒரு பிளான்க் பேப்பர்ல இருந்து ஆரம்பிப்பாங்க. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் சோர்ஸ் ஒன்னுதான். அந்த ரிதம் எங்களைக் கனெக்ட் பண்ணுச்சு. தொடர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பிச்சோம். ஒவ்வொன்றும் நன்றாக வந்தது. தாய்க்கிழவி வரை எங்க ஜர்னி வந்து. இப்ப அடுத்தது ‘மக்கள் காவலன்’ படத்திலும் பாடல் எழுதிட்டிருக்கிறார். எங்க ஜர்னி ரொம்ப நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எப்பவும் அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அந்த எனர்ஜிதான் ஆர்ட்டாக மாறுகிறது என நம்புகிறேன். இந்தத் தொகுப்பில், ‘அப்பா தீபாவளி’ எனும் கதை படிச்சேன். எளிமையான மனிதர்கள் பற்றிய கதை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எளிமையாக உள்ளவர்களோடு பழகினால் நம்ம மைண்ட் பயங்கரமா ரெஃப்ரெஷ் ஆகும். ஜெகன் கவிராஜ் அந்த மாதிரியான ஒருத்தர். அவரிடம் எப்ப பேசினாலும், புது விஷயங்களுக்கு ஓப்பனா இருப்பார். ஜெகன் மென்மேலும் வளர்வார். அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.
மு. ஜெகன் கவிராஜ் ஏற்புரை வழங்கி பேசும்போது, “என்னைக் கொண்டாடுறதுக்கு, என்னைப் பற்றிப் பேசுறதுக்கு, என்னை ரசிக்கிறதுக்கு யாருமே இருக்கமாட்டாங்க போல என மறைந்து விட்ட தேவதாஸ் அய்யாவிடம் 2014 இல் மிகத் துயரமான காலகட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசினேன். அப்பொழுது, அய்யா வைகுண்டரின் அகில திரட்டிலுள்ள, ‘காட்சி உனது கண் முன்னே காணும் மகனே கலங்காதே!’ எனச் சொல்லி ஆறுதல்படுத்தினார். ‘நீ என்னென்ன காட்சியெல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கியோ, அந்தக் காட்சிகளை எல்லாம் அய்யா தோன்ற வைப்பார்’ எனச் சொன்னார். இந்தக் காட்சியைச் சாத்தியப்படுத்திய அனைவருக்கும் ரொம்ப நன்றி.
எல்லோரும் என்னைப் பற்றிச் சொல்லும்போது, ‘நல்ல பையன் பாசிட்டிவா தான் பேசுவான்’ எனச் சொன்னாங்க. எல்லார் வீட்டிலும் அம்மா வளர்ப்புன்னு சொல்வாங்க. நாங்க எல்லாம் எங்க அக்கா வளர்ப்பு. ‘இந்தப் பிள்ள என்ன இவ்ளோ கருப்பா இருக்கு!’ என நாங்க எந்தப் பிள்ளையாவது கிண்டல் பண்ணா, ‘ஏலே, அக்காளும் கருப்பாதான்ல இருக்கேன். அப்ப அக்காள ஒருத்தவங்க சொல்வாங்க இல்ல. அப்ப நீங்க அக்காளைப் பத்தி நினைக்கணும்’ என அக்கா எங்களுக்குச் சொல்வாங்க. நாம எந்த ஒரு பிள்ளையைத் தப்பா பேசும்பொழுது அக்காவை நினைக்கணும்னு ஸ்கூலுக்குப் போகும்பொழுது சொல்வாங்க. அதனால் எங்க எல்லாம் தவறுதலான ஒரு சூழல் வரும்போது, நாங்க அக்காவை நினைச்சுப்போம். நாங்க அம்மாவோட வார்ப்பு, அக்காவோட வளர்ப்பு. அந்த அக்கா இன்று, என் புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தொகுத்துரை வழங்குவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.
‘மிகவும் கஷ்டத்தில் ஒருவன் என்னிடம் வந்தால் நான் என்ன செய்யவேண்டும்?’ என நபிகள் நாயகத்திடம் ஒருத்தன் கேட்கிறான். ‘நீ பணம் கொடு’ என்கிறார் நபிகள். ‘பணம் என்னிடம் இல்லையென்றால்?’ என்று கேட்கிறான். ‘சோறு கொடு’ என்கிறார் நபிகள். ‘சோறு இல்லைன்னா?’ என மீண்டும் கேட்கிறான். ‘தண்ணி கொடு’ என்கிறார் நபிகள். ‘தண்ணியும் இல்லைன்னா?’ எனக் கேட்டதற்கு, ‘நாலு நல்ல வார்த்தைகளையாவது கொடு’ என்கிறார் நபிகள். இந்த உலகத்தில் நாலு நல்ல வார்த்தைகள் கூட தர்மம் தான் என நபிகள் சொல்கிறார். இது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. அய்யா வைகுண்டரும், ‘செவ்வென்ற பேச்சு செப்பியிரு என்மகனே’ எனச் சொல்கிறார். ‘சிறந்த பேச்சைப் பேசு. என்ன நடந்துவிடப் போகுது வாழ்க்கையில்? நீ நெகட்டிவா பேசி என்னாயிடப் போகுது? சும்மா நாலு நல்ல வார்த்தை பேசு’ என அய்யா வழியில் நிறைய நல்ல மனிதர்கள் சொல்லிக் கொடுத்ததாலோ என்னவோ கதையில் எதிர்மறை பாத்திரங்களைப் படைக்க மனம் வரமாட்டேங்குது. நல்லது நினைச்சால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பது உண்மை.
அமீர் சாரோட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அதில் அவருக்காக ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதுல ஒரு வரி, ‘பொய்ய கூட்டிச் சொன்னதில்ல, கையக் கட்டி நின்னதில்ல’ என வரும். அது அமீர் சாருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். மனதில் தோன்றுவதை வாயில் மறைக்கவே தெரியாத மிகச் சிறந்த மனிதர். இந்த இடத்துல ஒரு விஷயத்தைப் பதிவு பண்ண நினைக்கின்றேன்.
இன்றைய முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அண்ணன், இன்னிக்கு அவர் அடைஞ்சிருக்கும் உயரம் நடக்குமா, நடக்காதா என்ற ஒரு மாதிரி கருத்துக் கணிப்பு இருக்கும்போது, அமீர் சார் ஒரு பத்திரிகையில் ஒரு வார்த்தை சொல்றார். ‘புரட்சித்தலைவர் எம்ஜியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு கூர்மையான வாள் வந்திருக்கு. அது நல்லது செய்யுமா, என்ன செய்யப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது’ எனச் சொன்னார். அனைவரும் அமீர் சாரை விமர்சனம் செய்தனர். ‘என்னப்பா உங்க ஆள் இப்படிச் சொல்றார்?’ எனக் கேட்டாங்க. ‘சொல்லியிருக்கார் பாருங்க’ என பதில் சொன்னேன். அவர் சொன்னது உண்மையாகிடுச்சு.
ஒரு கலைஞனின் வளர்ச்சியையும், ஒரு அரசியல் தலைவரோட வளர்ச்சியையும் கணிக்கக் கூடிய ஆற்றல் அமீர் சாருக்கு உண்டு. அவர் ஒரு சில விஷயத்தைக் கணிச்சா அது மாறவே மாறாது. நிவாஸ் K. பிரசன்னா பெரிய ஹீரோவார் எனக் கணிச்சிருக்கார். அது நடக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ஆசை என்னென்னா நிவாஸ் K.பிரசன்னா நடிச்சாலும், அந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கொடுப்பார். நிவாஸ் K. பிரசன்னா சாரைச் சந்தித்த பின் என் வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பது என் குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும். எனக்கொரு மிகப்பெரிய பாக்கியத்தை அவர் கொடுத்தார். தாய்க்கிழவி மேடைக்கு முன், ஒரு பாட்டுக்குப் பத்தாயிரம், பதினஞ்சாயிரம் என வந்ததென்றால், அதற்குப் பின், ‘ஒரு பாட்டுக்கு எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க?’ எனக் கேட்கிறாங்க. இந்த வார்த்தையைக் கேட்க எத்தனை வருஷம் ஆகியிருக்கு! அதற்குக் காரணம் நிவாஸ் சார்தான். அவருக்கு மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்றார்.
நிறைவாக இயக்குநரும் நடிகருமான அமீர் பேசுகையில் , “தாரே ஜமீன் பர் படத்தில் வரும் சிறுவனின் இன்னொரு வெர்ஷன் தான் நான். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் வரும். இந்த மேடைக்கு வரக் காரணம் புத்தகம் அல்ல. அந்தப் புத்தகத்தை எழுதிய நபர்தான் காரணம். ஏன் அவருக்காக நான் வருகிறேன் என்றால், உடன்பிறந்த சகோதரி தொகுத்து வழங்கப் புத்தகத்தைப் பெற்றோர் இருவரும் வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இருக்கு இல்லையா, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சுட்டான் என்கிற தருணம் அது. தன்னை இந்தச் சமூகம் ஒத்துக் கொண்டதுன்னு சொல்ற இடம் இருக்கில்லையா, அதைத் தன் குடும்பத்தார்க்கு உணர்த்தும் இடமிருக்கில்லையா, இந்த மாதிரி யார் விழா எடுத்தாலும் அந்த விழாவிற்குப் போவது என் வழக்கம். காரணம் எனக்கு இப்படியொரு விழா நடக்கவே இல்லை. நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய எந்தப் படத்திற்கும் வெற்றி விழா நடந்ததில்லை. என் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என் குடும்பத்தினர் வந்ததில்லை. அதனால் தான் யாராவது தன் உறவுகளோடு, ஒரு ஆளாகியிருக்கிறேன் என நிற்கும்பொழுது பக்கத்தில் நிற்க வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன். இதை விட பெரிய வெற்றி என்ன ஒரு மனிதன் அடைந்து விட முடியும்? ஜெகன் கவிராஜின் பெற்றோர் சென்னைக்கு வந்து முதல் முறையாக இப்படியொரு அரங்கில் மகனைப் பார்க்கிறார்கள் என்றால், இதுதான் ஒரு மனிதன் அடைந்த உயரம்.
திருநெல்வேலி பக்கத்தில் பூலாங்குளம் எனும் கிராமத்தில், டீக்கடையும் விவசாயமும் பார்த்த பெற்றோர்கள் ஆறாவதோடு படிப்பை நிறுத்தி பீடி பிடித்துக் கொண்டிருந்த ஜெகன், ஏதோ ஒரு மில்லில் போய் வேலை பார்க்க, பதினாறு வயசில் இப்படியிருந்தா கெட்டுப் போயிடுவான்னு உறவினர்கள் சேர்ந்து காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க. காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரத்திலும், பின் கேரளாவுக்குப் போய் மண்ணு சுமக்கிற வேலை பார்த்திருக்கார். திருச்சியில தெரு தெருவாகப் போய் பாத்திர வியாபாரம் பார்க்கிறார். பழைய புத்தகக் கடையில் எடைக்குப் புத்தகம் போடுவாங்க இல்ல, அதுல வர்ற புத்தகங்களைப் படிச்சு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் தான் இவரை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு. அதன் பின், ஏக இறைவனை வழிபடும் முற்போக்கான சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் கொண்ட அய்யா வழில நுழைகிறார். சென்னைக்கு வந்து வெற்றிவேந்தன் ஆஃபீஸ்ல வேலை செய்து, அவங்க கம்பெனி எடுத்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் கடைசி அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து, அந்த கம்பெனியிலேயே கேஷியராக வேலை பார்த்து, அதன் பின் பாட்டெழுதி, அப்புறம் மீடியாவிற்குள் வந்து, அப்புறம் ‘ஜீரக பிரியாணி’ பாடல், தாய்க்கிழவி படத்தில் பாட்டெழுதி, இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படத்துக்குப் பாட்டு எழுதி, ஒரு புத்தகம் எழுதி சென்னையில் பெரிய வெளியீட்டு விழா நடத்துறார். இந்த மாதிரியான ஆட்களைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெகனின் சிந்தனைக்கும், எண்ணத்துக்கும், அவர் சந்தித்த மனிதர்களையும், அவரது வட்டாரக் கதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.
