ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார்.
நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் நடிகை சிம்ரனிடம் எடுத்துரைத்தார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் தெரிவித்தார்.
இதையறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அந்த சந்திப்பில், நிஷா நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பாடலுக்கு அவருடனேயே இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், நிஷாவின் நீண்டநாள் கனவாக இருந்த புதிய சைக்கிளையும் பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை நிஷாவிடம் எடுத்துரைத்த நடிகை சிம்ரன், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் தனது கனவுகளையும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.
ஒரு சிறுமியின் முகத்தில் புன்னகையை மலரச் செய்ததோடு மட்டுமல்லாமல், அவரது எதிர்கால கனவுகளுக்கும் உறுதுணையாக நின்ற நடிகை சிம்ரனின் இந்த மனிதநேய செயல், அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


