விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர். சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பெத்தி’ .
மலையடிவாரத்தில் வசிக்கும் ராம்சரண் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத இவருடைய கிராமத்தில் ரயில் மட்டும் இவர்கள் ஊர் வழியாக செல்லும் ஆனால் இவர்கள் ஊரில் நிற்காது. இதனால் ஊர் பெரியவரான ஜெகபதி பாபு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை பார்த்து மனு கொடுக்கிறார் அதனால் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது.
சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கும் ராம்சரண் கூலிக்கு காசு வாங்கிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார். சூழ்ச்சியால் ஏமாற்றப்படும் ராம்சரண் தனக்கும் தனது கிராம மக்களுக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார்.
இதனையடுத்து தனக்கு ஒரு அடையாளம் தேவை என்பதை உணர்ந்து சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்றுக்கொள்கிறார். அதில் சாதனை படைத்து மாநில அளவிலான அரையிறுதி போட்டியில் வெற்றி பெரும் வேளையில் இவருடையில் காலில் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இறுதியில் தடைகளை தாண்டி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ? இல்லையா ? தனது அடையாளத்தை உலகறிய செய்தாரா? இல்லையா? கிராமத்திற்கு ரயில் நிலையம் கொண்டு வந்தாரா ? இல்லையா ? என்பதே ’பெத்தி’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராம்சரண் துடிப்பு மிக்க கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிரிக்கெட், மல்யுத்தம் , ஓட்டப்பந்தயம் என அனைத்து போட்டிகளிலும் தன் திறமையை நிரூபிப்பதற்காக கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறார். காதல், ஆட்டம், பாட்டு ,நடனம், கோபம், உணர்வு என படத்தின் முழுக்க கதையையும் தன் தோள் மீது சுமந்து நிற்கிறார்.
அச்சியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான்வி கபூர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நடிப்பை காட்டிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
மல்யுத்த குருவாக நடித்திருக்கும் சிவராஜ்குமார் அனுபவ நடிப்பால் கவனம் பெறுகிறார். ஊர் பெரியவர் ஜெகபதி பாபு, ராம்சரண் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர், திவ்யேந்து சர்மா, பொமன் இராணி, என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
ஊர் அடையாளத்தை பெறுவதற்காக போராடும் ஒரு விளையாட்டு வீரனின் கதையை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சனா இத்திரைப்படத்தில் சாதி அரசியல், சமூக ஏற்றத்தாழ்வு , மனித உணர்வுகள் ஆகியவற்றை குறித்து இத்திரைப்படம் பேசியிருக்கிறது. நகரத்தை விட கிராமத்தில் இருந்து விளையாட்டு வீரரை தேட வேண்டும் என்று அழுத்தமாக கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் ’பெத்தி’ – அடையாளத்திற்காக போராடும் வீரன்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : ராம் சரண், ஜான்வி கபூர். சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம் : புச்சி பாபு சனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
