வெங்கட் கே. நாராயணா (K.V.N. புரொடக்ஷன்ஸ்) & ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்) தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ஃபர்ஸானா பலத்திங்கல், ஆதிஷேஷன் K.R., சினான், ஜீன் பால் லால், கிரிஷ் A.D. ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாலன் – தி பாய்’.
கணவனை இழந்த ஃபர்ஸானா சிறையில் தனது 5 வயது மகனுடன் வசித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து தன் மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் ஃபர்ஸானா யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பல இடங்களில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பெரிய வீட்டில் தனிமையில் இருக்கும் வயதான பாட்டி ஒருவரை பார்த்து கொள்வதற்காக அங்கு தனது மகனுடன் செல்கிறார். அங்கிருக்கும் பள்ளியில் மகனை சேர்த்து விடுகிறார். ஒரு நாள் பாட்டிக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டு பாட்டி இறந்து விட அவரை அங்கிருக்கும் தோட்டத்தில் அடக்கம் செய்து விடுகிறார்.
பள்ளி முடிந்து வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் ஃபர்ஸானா, மகனிடம் எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை காத்திருக்க வேண்டும் கூறுகிறார். இதே சமயம் பாட்டியின் மகன் அன்று மாலை அவரை பார்க்க வருவதாக தொலை பேசியில் கூறுகிறார். இதனால் மகனை அழைத்து வர முடியாத சூழ்நிலை ஃபர்ஸானா ஏற்படுகிறது.
பல மணிநேரம் காத்திருக்கும் சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டு போய் சிறை சாலையில் வைத்து தாய் குறித்து விசாரிக்கிறார்கள். அதற்கு மகன் பதில் அளிக்காமல் அமைதியாக நிற்கிறான்.
இறுதியில் மகன் சிறையில் இருந்து தப்பிச் சென்றானா? இல்லையா ? தாய் – மகன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா? என்பதே ‘பாலன் – தி பாய்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஃபர்ஸானா தாய் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாலே மிரட்டுகிறார். பாசம், தவிப்பு, போராட்ட குணம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருடனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ் படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் ஜீன் பால் லால், இளம் சிறுவனாக வரும் ஆதிஷேஷன் K.R. வயது வந்த சிறுவனாக வரும் சினான் , பாட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையும், ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தாய் -மகன் தங்களுடைய அடையாளங்களை மறைத்து வாழ நினைப்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் சிதம்பரம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இத்திரைப்படத்திலும் தனது முத்திரையை மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்போடு கதையை கொண்டு சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘பாலன் – தி பாய்’ – அடையாளம் இல்லாத வாழ்க்கை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஃபர்ஸானா பலத்திங்கல், ஆதிஷேஷன் K.R., சினான், ஜீன் பால் லால்
இசை : சுஷின் ஷியாம்
இயக்கம் : சிதம்பரம்
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்
