ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ’, இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். மனோஜ் குமார் காதோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,‘ஷீரோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில்  உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.’ என்றார்.

‘ஷீரோ’  பட அனுபவம் குறித்து நடிகை சன்னி லியோன் பேசுகையில், ‘ஷீரோ’ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷீரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.’ என்றார்.

சன்னி லியோன் கதையின் நாயகியாக அதிரடி ஆக்சன் நாயகியாக நடித்திருக்கும் ‘ஷீரோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.