முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘என்ஜாய்’. டைட்டிலுக்கு ஏற்றபடி இரண்டு மணி நேரமும் படம் பார்ப்பவர்களை என்ஜாய் பண்ண வைத்துள்ளதா இந்த படம் ? பார்க்கலாம்.

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.

காதலி இருந்தாலும், சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ண நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்பி செல்கிறார்கள்.

அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். இதனை பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், பார்ட்டியில் முதன்முறையாக என்ஜாய் பண்ண வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் ஒன்றாக சந்தித்து ஒரே அறையில் தங்கும் சூழலும் உருவாகிறது. ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்ட தோழிகளுக்கு பார்ட்டியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அவர்களுக்கு உதவப்போய் இந்த மூன்று இளைஞர்களும் சிக்கலில் சிக்குகிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா ? இல்லை இழப்பை சந்தித்தார்களா ? இதில் அவர்களுக்கு கிடைத்த பாடம் என்ன ? படம் நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பது மீதிக்கதை.

இளைஞர்களை மையப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாக இந்த கதையை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி. அந்தவகையில் அவரை முதலில் பாராட்டி விடலாம். குறிப்பாக இன்றைய பல இளைஞர்களின் மனப்போக்கை ஒவ்வொரு கதாப்பாத்திரம் வாயிலாக நன்றாக வெளிப்படுத்தவும் செய்துள்ளார் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும். அதேசமயம் கதைப்போக்கில் நகைச்சுவையாக இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்து இருக்கலாம் ஒருவேளை இளைஞர்கள் மட்டும் படம் பார்த்தால் போதும், அவர்கள் நிச்சயம் இதை ரசிப்பார்கள் என நினைத்து விட்டாரோ என்னவோ ?

அதேபோல நண்பர்கள் மூவரும் இருக்கும் வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் அந்த ஆன்ட்டி போர்சன், கையில் முளைத்திருக்கும் ஆறாம் விரல் போல தேவையற்ற ஒன்றாகவே நினைக்க தோன்றுகிறது.. இப்படி சின்னச்சின்ன குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இது இளைஞர்கள் ரசித்து பார்க்கக்கூடிய, அவர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் சொல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் என தாராளமாக சொல்லலாம்.

தயாரிப்பு –
எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன்

ஒளிப்பதிவு –
KN அக்பர்,

இசை – Km ரயான் .

எடிட்டர் – மணி குமரன்.

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

பாடல்கள் – விவேகா, உமாதேவி.

நடனம்- தினேஷ்.

சண்டை- டேஞ்சர்மணி

கலை- சரவண அபிராமன்.

நடிகர்கள்-

மதன்குமார்
டான்சர் விக்னேஷ்
ஹரீஸ்குமார்
நிரஞ்சனா
ஜீ,வி அபர்ணா,
சாய் தன்யா
ஹாசின்
சாருமிசா

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.